விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பள்ளபட்டி கிராமத்தைச் சேர்ந்த 14 வயது மாணவர் கிஷோர், மாநில அளவிலான ஜூடோ போட்டியில் தங்கப்பதக்கம் வென்று, தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.
பள்ளபட்டியைச் சேர்ந்த அழகுராஜா - செல்லம் தம்பதியரின் மகனான கிஷோர், சிவகாசியில் உள்ள தனியார் சர்வதேசப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
சென்னையில் கடந்த 10, 11, 12 ஆகிய தேதிகளில் சர்வதேசப் பள்ளிகளுக்கு இடையே தென் மாநில அளவில் நடைபெற்ற ஜூடோ போட்டியில் கிஷோர் பங்கேற்றார். இதில் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.
இந்த வெற்றியின் மூலம், வரும் 30-ஆம் தேதி முதல் அக்டோபர் 1, 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகள் வரை ஹரியானா மாநிலத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான ஜூடோ போட்டிக்கு கிஷோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மாநில அளவில் சாதனை படைத்த மாணவர் கிஷோருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
தேசிய அளவிலான போட்டியிலும் வெற்றி பெற்று, எதிர்காலத்தில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பதே தனது லட்சியம் என மாணவர் கிஷோர் தெரிவித்துள்ளார்.

