புதுச்சேரியில், தமிழ்நாடு அரசு குடிசை மாற்று வாரியத்தில் வீடு கட்ட கடன் பெற்றுத் தருவதாக கூறி ரூ.2.50 கோடி மோசடி செய்த வழக்கில் இருவருக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வழக்கு விவரங்களின்படி, புதுச்சேரியைச் சேர்ந்த கிருஷ்ணன் (எ) சுதர்ஷன் என்பவரிடம், சென்னைச் சேர்ந்த ரமா (எ) மகாலட்சுமி, குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீட்டுக் கடன் பெற்றுத் தருவதாக உறுதியளித்ததாக கூறப்படுகிறது. இதனை நம்பிய கிருஷ்ணன், தனது அறிமுகமானவர்களிடமிருந்து சுமார் ரூ.2.50 கோடி தொகையை திரட்டி வழங்கியதாக விசாரணையில் தெரியவந்தது. பின்னர் கடன் கிடைக்காததால் மோசடி வெளிச்சத்துக்கு வந்தது.
இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து, ரமா மற்றும் சபரிநாதன் மீது வழக்குப் பதிவு செய்தனர். விசாரணையின் போது, போலீஸ் விசாரணையை தவறாக வழிநடத்த முயன்றதாகக் கூறி கிருஷ்ணனையும் குற்றவாளியாக சேர்த்தனர். இந்த வழக்கில் சபரிநாதன் தற்போது தலைமறைவாக உள்ளதாகவும், அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை முடிவில், ரமா மற்றும் கிருஷ்ணன் ஆகியோருக்கு இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 420-ன் கீழ் 5 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், பிரிவு 406-ன் கீழ் விதிக்கப்பட்ட 3 ஆண்டு தண்டனையுடன், இரு தண்டனைகளையும் ஒரே நேரத்தில் அனுபவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ரமாவுக்கு ரூ.50 லட்சம் மற்றும் கிருஷ்ணனுக்கு ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் செலுத்தத் தவறினால் கூடுதலாக 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

