நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
பழனி மலைக்கோயில் வெளிப்பிரகாரத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஆனந்த விநாயகருக்கு இன்று (14.09.2026) அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பால், பன்னீர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து ஆனந்த விநாயகருக்கு வெள்ளிக் கவசம் மற்றும் வண்ண மலர் மாலைகள் சாத்தப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. உலக நன்மை மற்றும் பக்தர்களின் நலன் வேண்டி சிறப்பு கணபதி ஹோமமும் நடத்தப்பட்டது.
தமிழ்நாடு பிராமண சமாஜம் மாநிலத் தலைவர் ஹரிஹர முத்து ஐயர் தலைமையில் நடைபெற்ற இந்த வழிபாட்டில், அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் உள்ளூர், வெளியூர் பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் ஆனந்த விநாயகரை தரிசித்து வழிபட்டனர்.

