சிவகாசி பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியுதவி வழங்கப்பட்ட போது, உயிரிழந்த ஒருவரின் மனைவி அமைச்சர்களின் காலில் விழுந்து அரசு வேலை கோரி கண்ணீர் விட்டு அழுத சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மின்னணு குடும்ப அட்டை வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக, விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியில் கடந்த 26.07.2024 அன்று ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் உயிரிழந்த 5 நபர்களின் குடும்பத்தினருக்கு, தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.4 லட்சத்திற்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அமைச்சர் கீர்த்தனா மற்றும் சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் நிவாரணக் காசோலைகளை வழங்கினர்.
அப்போது, விபத்தில் உயிரிழந்த ஒருவரின் மனைவி காசோலையைப் பெற்றுக்கொண்ட போது, திடீரென அமைச்சர்களின் கால்களில் விழுந்து கண்ணீர் விட்டு அழுதார். மேலும், தனது குடும்பச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தமக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும் என உருக்கமாகக் கோரிக்கை வைத்தார். இதையடுத்து, அவரது கண்ணீரைத் துடைத்த அமைச்சர்கள், அவருக்கு உரிய ஆறுதல் கூறி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

