திருச்சுழி அருகே நள்ளிரவில் மரக்கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மரக்கட்டைகள், இயந்திரங்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் தீயில் கருகி சேதமடைந்தன. சேதத்தின் மதிப்பு சுமார் ரூ.6 கோடி இருக்கும் என கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள எம்.ரெட்டியாபட்டியைச் சேர்ந்த சரவணன் (60), கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் மரக்கடை நடத்தி வருகிறார். வெளிமாநிலங்களில் இருந்து பல்வேறு வகையான மரங்களை கொள்முதல் செய்து, அவற்றை பயன்படுத்தி கதவு, ஜன்னல்கள் உள்ளிட்ட பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார். இவரது நிறுவனத்தில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
நேற்று வழக்கம்போல் மாலை நேரத்தில் தொழிலாளர்கள் பணிகளை முடித்துவிட்டு வீடுகளுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில், நள்ளிரவில் கடையின் உள்ளே திடீரென தீப்பற்றியுள்ளது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்டமாக கூறப்படுகிறது.
கடையில் அதிக அளவில் காய்ந்த மரக்கட்டைகள் இருப்பு வைக்கப்பட்டிருந்ததால், தீ வேகமாக பரவி அடுத்தடுத்த பகுதிகளையும் சூழ்ந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் அடர்ந்த புகைமூட்டம் ஏற்பட்டது.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும், நிலை அலுவலர் சந்திரசேகரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அருப்புக்கோட்டை, காரியாபட்டி மற்றும் விருதுநகர் பகுதிகளில் இருந்து கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. பல மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்த விபத்தில் கடையில் வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான மரக்கட்டைகள், இயந்திரங்கள் மற்றும் அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்து நாசமாகின. இதன் மூலம் சுமார் ரூ.6 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கடை உரிமையாளர் சரவணன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
மேலும், தீ அருகில் இருந்த கடைகள் மற்றும் கட்டிடங்களுக்கு பரவாமல் தடுக்கும் வகையில், சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டு அங்கிருந்த பொருட்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டன.
இருப்பினும், அருகில் இருந்த ஐந்துக்கும் மேற்பட்ட கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக எம்.ரெட்டியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீ விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

