நீர்நிலைகளைப் பாதுகாத்து புனரமைப்பதுடன், மழைநீர் சேகரிப்புக்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட உள்ளதாக விருதுநகர் மாவட்டத்தின் புதிய ஆட்சியர் ஷரண்யா அறி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தின் 26வது மாவட்ட ஆட்சியராக ஷரண்யா அறி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு கோப்புகளில் கையெழுத்திட்டு தனது பணிகளை அவர் தொடங்கினார். தொடர்ந்து, பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் ஷரண்யா அறி, தனது நிர்வாகத்தின் முக்கிய முன்னுரிமைகள் குறித்து தெரிவித்தார்.
நீர்நிலைகள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்
மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாப்பதும், அவற்றை முறையாகப் புனரமைப்பதும் தனது முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருக்கும் என அவர் கூறினார்.
மேலும், மழைநீரை சேகரிப்பதற்கான நடவடிக்கைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு அரசின் சலுகைகள்
விவசாயிகளுக்காக தமிழக அரசு வழங்கி வரும் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சலுகைகள், தகுதியுள்ள அனைத்து விவசாயிகளையும் சென்றடைவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஷரண்யா அறி கூறினார்.
ஒரு விவசாயி கூட அரசின் நலத்திட்டப் பயன்களில் இருந்து விடுபடாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
பட்டாசுத் தொழிலாளர்களின் பாதுகாப்பு
விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய தொழில்களில் ஒன்றான பட்டாசுத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழலை ஏற்படுத்துவது மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய பொறுப்பு என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.
பட்டாசு ஆலைகளில் விபத்துகளைத் தடுக்கும் வகையில் சிறப்புக் குழு அமைத்து, அனைத்து பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளும் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பது கண்காணிக்கப்படும் என அவர் கூறினார்.
மேலும், பட்டாசு உற்பத்தி நடைபெறும் இடங்களில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய, பல்வேறு அரசுத் துறைகளை ஒருங்கிணைத்து செயல்பட உள்ளதாகவும், தானும் நேரடியாக கள ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாகவும் ஷரண்யா அறி தெரிவித்தார்.
“மக்களை நானே நேரில் சந்திப்பேன்”
மக்களுக்காகவே தான் பணியாற்றப் போவதாக தெரிவித்த மாவட்ட ஆட்சியர், பொதுமக்கள் தன்னை சந்திப்பதற்காக அலுவலகத்திற்கு வர வேண்டும் என்ற நிலை இல்லாமல், அவர்களது பகுதிகளுக்கே நேரில் சென்று பிரச்சினைகளை அறிந்து கொள்வதே தனது அணுகுமுறை என கூறினார்.
“மக்களை நானே நேரில் சென்று சந்திப்பேன். அவர்களின் பிரச்சினைகளை நேரடியாக ஆய்வு செய்து, அவற்றுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன்” என மாவட்ட ஆட்சியர் ஷரண்யா அறி உறுதியளித்தார்.

