விருதுநகர்: அரசுத் திட்டங்கள் வெறும் அறிக்கைகளாக மட்டுமே எஞ்சியிருக்காமல், பயனாளிகளை நேரடியாகச் சென்றடையும் வகையில் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருவதாகத் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, "அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் ஏட்டளவில் இல்லாமல், தகுதியுடைய அனைத்துப் பயனாளிகளின் கைகளுக்கும் நேரடியாகச் சென்றடைவதை அரசு தொடர்ந்து உறுதி செய்து வருகிறது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "விருதுநகர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கும் மக்கள் சேவைக்கும் இரு அமைச்சர்கள் மற்றும் இரு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகிய நால்வரும் நான்கு தூண்களாக நின்று செயல்படுவோம். நாங்கள் மட்டுமன்றி, எதிர்க்கட்சிச் சட்டமன்ற உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து மக்களுக்கான நலப்பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்வோம்" எனத் தெரிவித்தார்.

