சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிFact CheckEmergencyBloodQuizPollsMarketForumsCitizen ReporterReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/News/"உள்ளாட்சித் தேர்தலில் சரியான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்தால் மட்டுமே லஞ்சத்தை ஒழிக்க முடியும்": விருதுநகர் எம்.எல்.ஏ. ஏ.ஆர்.ஆர். செல்வம் பேச்சு
News

"உள்ளாட்சித் தேர்தலில் சரியான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்தால் மட்டுமே லஞ்சத்தை ஒழிக்க முடியும்": விருதுநகர் எம்.எல்.ஏ. ஏ.ஆர்.ஆர். செல்வம் பேச்சு

The News Outlook
🕒 27 ஜூலை, 2026, 04:54 PM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
"உள்ளாட்சித் தேர்தலில் சரியான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்தால் மட்டுமே லஞ்சத்தை ஒழிக்க முடியும்": விருதுநகர் எம்.எல்.ஏ. ஏ.ஆர்.ஆர். செல்வம் பேச்சு

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர்: வரும் உள்ளாட்சித் தேர்தலில் வார்டு உறுப்பினர்களாகவும், கவுன்சிலர்களாகவும் சரியான நபர்களைத் தேர்ந்தெடுத்தால் மட்டுமே லஞ்சத்தை 100 சதவீதம் முழுமையாக ஒழிக்க முடியும் என்று விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர். செல்வம் தெரிவித்துள்ளார்.

விருதுநகரில் நடைபெற்ற யோகாசனப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கிப் பேசிய சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர். செல்வம், மக்கள் சேவையே தனது முதன்மை இலக்கு என்று குறிப்பிட்டார்.

"யோகா பயிற்சி மன அமைதிக்கு அவசியம்"

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: "நான் எவ்வளவு பெரிய உயரத்திற்குச் சென்றாலும், எனக்கு வாக்களித்துச் சட்டமன்ற உறுப்பினராக்கிய தொகுதி மக்களுக்கு என்றும் நன்றியுடையவனாக இருப்பேன். குடிநீர்ப் பிரச்சனை, மின்சாரக் குறைபாடு எனப் பல்வேறு கோரிக்கைகளுக்காக நள்ளிரவு 3 மணிக்கும், அதிகாலை 5 மணிக்கும் கூட பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளிடம் இருந்து தொடர்ந்து அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன. மனமும் உடலும் எப்போதும் தீவிர இயக்கத்திலேயே இருப்பதால் ஏற்படும் தூக்கமின்மையைப் போக்கவும், மன அமைதி மற்றும் உடல் ஆரோக்கியத்தைப் பெறவும் யோகாப் பயிற்சி மிக அத்தியாவசியமான ஒன்று. நானும் யோகா பயிலத் திட்டமிட்டுள்ளேன்," என்றார்.

10 பைசா கூட லஞ்சமாகக் கொடுக்காதீர்கள்!

தன்னை வெறும் எம்.எல்.ஏ-வாகப் பார்க்காமல் மக்கள் சேவகனாகக் கருத வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட அவர், லஞ்ச ஒழிப்பு குறித்துப் பேசுகையில்: "பிறப்புச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ், குடிநீர் இணைப்பு என எந்தவொரு அரசுச் சார்ந்த பணிக்கும் அதிகாரிகளுக்கு 10 பைசா கூட லஞ்சமாகக் கொடுக்காதீர்கள். லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து எனக்கு உடனடியாகத் தகவல் தெரிவியுங்கள்; அடுத்த நிமிடமே அந்த அதிகாரி விருதுநகரில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்படுவார்."

"பணம் கொடுத்து காரியத்தைச் சாதித்துக் கொள்ளலாம் என்ற பழைய எண்ணத்தை மக்கள் தயவுசெய்து கைவிட வேண்டும். முந்தைய ஆட்சிக் காலத்தில் லஞ்சம் வாங்கிப் பழகிய சில அதிகாரிகள் தற்போதைய அரசிற்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதில்லை. மக்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே இந்த தவறான நடைமுறைகளை மாற்றியமைக்க முடியும்" என்று அவர் வலியுறுத்தினார்.

உள்ளாட்சித் தேர்தலும் நிர்வாகச் சீர்திருத்தமும்:

உள்ளாட்சித் தேர்தலின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டிய அவர், "ஒவ்வொரு வார்டிலும் குடிநீர் வருகிறதா, தெருவிளக்குகள் எரிகிறதா, சாலை வசதிகள் சரியாக உள்ளதா என வீட்டிற்கு வீடு சென்று ஆய்வு செய்யும் நல்ல பிரதிநிதிகளையே (கவுன்சிலர், பஞ்சாயத்துத் தலைவர்) மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். ரூ.6,000 செலவில் அமைக்கப்பட்ட குடிநீர்த் தொட்டிக்கு ரூ.18,000 எனக் கணக்குக் காட்டும் முறைகேடுகள் இனி நடைபெறாது. முதலமைச்சர் மற்றும் கழகப் பொதுச்செயலாளரின் வழிகாட்டுதலில் போட்டியிடும் நல்ல வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுங்கள்."

"சட்டமன்ற உறுப்பினரான நான் லஞ்சம் வாங்குவதும் இல்லை, லஞ்சம் கொடுப்பதுமில்லை என்ற உறுதியான கொள்கையோடு செயல்பட்டு வருகிறேன். அதேபோல ஒவ்வொரு கவுன்சிலரும், வார்டு உறுப்பினரும் உறுதியுடன் செயல்பட்டால் மட்டுமே லஞ்சத்தை முற்றிலும் ஒழிக்க முடியும்" எனக் கூறினார்.

பெற்றோர்களுக்கு அறிவுரை:

இறுதியாக, மாணவர்களின் எதிர்காலம் குறித்துப் பேசிய சட்டமன்ற உறுப்பினர், "பெற்றோர்கள் குழந்தைகளை வெறும் மதிப்பெண்களை மட்டும் வைத்து மதிப்பிட வேண்டாம். உங்கள் குழந்தைகளுக்கு எந்தத் துறையில் தனித்திறமையும் ஆர்வமும் உள்ளதோ, அந்தத் துறையில் அவர்கள் சாதிக்க முழு ஆதரவுளியுங்கள். குழந்தைகளின் திறனைக் கண்டறிந்து அவர்களைச் சாதனையாளர்களாக மாற்ற இந்த அரசு எப்போதும் துணையாக இருக்கும்," எனத் தெரிவித்தார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...