விருதுநகர்: விருதுநகரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான யோகாசனப் போட்டியில் 300-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இப்போட்டியில் அதிக புள்ளிகளைப் பெற்று சிவகாசி ரோட்டரி மேல்நிலைப்பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
ஜேசிஐ விருதுநகர் எலைட், அம்பாள் ராமசாமி யோகாசன மையம், அலிஃப் குளோபல் எஜுகேஷன் அண்ட் கேரியர்ஸ் மற்றும் எஸ்.என்.பி. ஜவுளிக்கடை ஆகிய அமைப்புகள் இணைந்து விருதுநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இப்போட்டிகளை நடத்தின. மொத்தம் 18 பிரிவுகளின் கீழ் நடைபெற்ற இப்போட்டியில், மாவட்டம் முழுவதிலும் இருந்து 300-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடம் பிடித்தவர்களுக்கு ரூ. 1,500, இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ. 1,000 மற்றும் மூன்றாம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ. 500 ரொக்கப் பரிசுடன் சான்றிதழ்களும், நினைவுக் கேடயங்களும் வழங்கப்பட்டன. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் செல்வம் மற்றும் வழக்கறிஞர் ரகுராமன் ஆகியோர் கலந்துகொண்டு, வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினர்.
போட்டிகளில் சிறப்பான திறனை வெளிப்படுத்தி அதிக புள்ளிகளைக் குவித்த சிவகாசி ரோட்டரி மேல்நிலைப்பள்ளி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜேசிஐ விருதுநகர் எலைட் தலைவர் தனலெட்சுமி, தொழிலதிபர் சரவண குரு மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

