ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ரூ.40 கோடி சீட்டு நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழக வெற்றி கழக (தவெக) பிரமுகர் ஜெகநாதனின் வீட்டில், மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த காளீஸ்வரி, அவரது மகனும் தவெக பிரமுகருமான ஜெகநாதன் மற்றும் ஜெகநாதனின் மனைவி பொன் லட்சுமி ஆகியோர் இணைந்து சிறுசேமிப்பு சீட்டு நிறுவனம் நடத்தி வந்துள்ளனர். பொதுமக்களிடம் இருந்து சுமார் ரூ.40 கோடி வரை வசூலித்து மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதனிடையே, மோசடி வழக்கில் தொடர்புடைய ஜெகநாதன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது காதலியும் 4 வயது சிறுமியின் தாயாருமான நந்தினி ஆகியோர் மீது, அச்சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக போக்சோ (POCSO) சட்டத்தின் கீழும் தனியாக ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இரு வெவ்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த இவர்களைப் பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின் ஒடிசா மாநிலம் ஜெகத்பூரில் வைத்து ஜெகநாதன், நந்தினி மற்றும் காளீஸ்வரி ஆகிய மூவரையும் கைது செய்தனர். பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நிதி மோசடி வழக்கின் முக்கிய குற்றவாளியான காளீஸ்வரியை, விருதுநகர் மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு ஆய்வாளர் நாகலட்சுமி தலைமையிலான காவல்துறையினர் ஜெகநாதனின் வீட்டிற்கு நேரில் அழைத்துச் சென்று சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, சீட்டு கணக்கு புத்தகங்கள் மற்றும் சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த சோதனை குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களை அங்கிருந்த காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றியது அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

