திருச்சி: திருச்சி பொன்மலை பகுதியில் மனைவியுடன் வீடியோ காலில் பேசிய பின்னர், இளம் வழக்கறிஞர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி எம்.கே. கோட்டை, விவேகானந்தர் நகர், அல்லி முதல் தெருவைச் சேர்ந்தவர் ஹரி ராமச்சந்திரன் (27). பி.ஏ. எல்.எல்.பி (BA LLB) சட்டப்படிப்பு முடித்துள்ள இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக திருச்சி நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ஹரிதாஸ் என்பவரிடம் உதவி வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார். இவருக்கும் திவ்யபாரதி என்ற பெண்ணிற்கும் கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தற்போது ஒன்றரை மாதத்தில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. பிரசவத்திற்காக திவ்யபாரதி கடந்த மூன்று மாதங்களாகத் தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், கணவன்-மனைவி இடையே குடும்பத் தகராறு நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று இரவு மனைவியுடன் வீடியோ காலில் பேசிய ஹரி ராமச்சந்திரன், திடீரென தனது கைபேசியின் கடவுச்சொல் (Password) மற்றும் முக்கியத் தகவல்களை மனைவியின் வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி வைத்துள்ளார். தொடர்ந்து, இன்று காலை 8:30 மணியளவில் நீதிமன்றத்தில் தன்னுடன் வேலை பார்க்கும் தோழி ஒருவரிடமும் சுமார் 25 வினாடிகள் கைபேசியில் பேசியுள்ளார்.
இதனிடையே, இன்று மதியம் 12:30 மணியளவில் அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரான முன்னாள் எஸ்.எஃப்.ஐ (SFI) மாவட்டச் செயலாளர் மோகன்குமார், ஹரி ராமச்சந்திரனை பலமுறை அழைத்தும் எவ்வித பதிலும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர், கதவு திறந்திருந்த நிலையில் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது, அறையில் சேலையால் தூக்கிட்ட நிலையில் ஹரி ராமச்சந்திரன் சடலமாகத் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து உடனடியாக பொன்மலை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொன்மலை காவல்துறையினர், ஹரி ராமச்சந்திரனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்ததுடன், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அவரது உடலில் காயங்கள் ஏதுமில்லை என்பதும், குடும்பப் பிரச்சினை காரணமாகவே அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

