விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர்–மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் யானை, புலி, மான், மிளா, காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் போதிய மழை இல்லாததால் தற்போது கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் பலவும் வறண்டு காணப்படுகின்றன. இதன் காரணமாக வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி மலையடிவாரப் பகுதிகளை நோக்கி இறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், வத்திராயிருப்பு அருகே உள்ள கோயிலாறு அணைப்பகுதியில் யானை ஒன்று அழுகிய நிலையில் உயிரிழந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை அதிகாரிகள், உயிரிழந்த யானையை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். யானை வறட்சி காரணமாக உயிரிழந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

